Sunday, June 3, 2012

உண்மையான ஹீரோக்களைக் கண்டறிவோம்.


"மரணம் என் வாழ்வின் வாசற்கதவைத் தட்டுவது என் காதில் கேட்கிறது.  என் மனம் எல்லையற்ற பெருவெளியை நோக்கிப் பறக்கத் தொடங்கிவிட்டது. விழி மூடும் இந்த மரணப் பொழுதில் என் நண்பர்களிடம் ஒன்றை மட்டும் என் நினைவாக விட்டுச் செல்கிறேன்.  அதுதான் 'சுதந்திர இந்தியா' என்ற என் பொற்கனவு.  தோழர்களே, இந்தக் கனவை நனவாக்க, நம் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள்" என்று தன் மரண வாக்குமோலத்தை எழுதி வைத்துவிட்டு தன்னுடைய 37ம் வயதில் வாழ்வை முடித்துக் கொண்டு, இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் சுதந்திரப் போராட்டத் தியாகி சூர்யா சென்.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த வங்காளத்தின் துறமுக நகரம் சிட்டகாங்கில் பிறந்த மாவீரன் சூர்யா சென். 'யுகாந்தர்' எனும் புரட்சிப் படையை நிறுவி, வெள்ளையருக்கு எதிராக கொரில்லாப் போர் நடத்தி, அஸ்ஸாம்-பெங்கால் ரயில்வே கருவூலத்தைச் சூறையாடி, பிரிட்டிஷ் அரசின் மிகப் பெரிய ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றி, கொளுத்திச் சாம்பலாக்கிய புரட்சி வீரன் சூர்யா சென்.

அதற்காக அவருக்குப் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு வழங்கிய தண்டனை என்ன தெரியுமா? தூக்குத் தண்டனை.  சாதாரண தூக்குத் தண்டனையா? மனிதகுலம் வெட்கப்பட வேண்டிய சித்திரவதையான தூக்குத் தண்டனை.  தூக்கு மேடை ஏறுவதற்கு முன்பு சூர்யா சென்னின் பற்கள் அனைத்தும் சுத்தியல் கொண்டு உடைக்கப்பட்டன. விரல்களிலிருந்து நகங்கள் சதையோடு பிடுங்கி வீசப்பட்டன.   அவ்வீரனின் ஒவ்வொரு மூட்டு இணைப்பும் முறிக்கப்பட்டன.  முற்றிலும் நினைவு தவறிய நிலையில் தூக்கிலிடப்பட்ட அந்த மாபெரும் வீரனின் உடல் வங்கக்கடலில் வீசியெறியப்பட்டது."

நன்றி: தினமணி கதிர், 03.06.2012.

No comments:

Post a Comment